செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை குறை சொல்வதா?: ப.சிதம்பரத்துக்கு டாக்டர் தமிழிசை கண்டனம்

நீங்கள் முடியாது என்று சொன்னதை முடித்து காட்டுபவர் எங்கள் மோடி என்று ப.சிதம்பரத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேலையின்றி இருப்போர்க்கு உதவ கிடைக்கும் வங்கிக்கடன் மூலம் ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால் கூட தினசரி ரூ. 200 பெற முடியம் என்று சொன்னதை திரித்து கூறி பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுக்கு சமமாக ஒப்பிட்ட ப.சிதம்பரம் கண்களுக்கு சுய வேலை வாய்ப்பு என்பது கேவலமாக தோன்றுவது ஏன்?.

உலகின் மிகப்பெரிய அளவிலான மக்கள் உடல்நலம் பேணும் காப்பீட்டு திட்டத்தை 50 கோடி மக்களுக்கு எப்படி செயல்படுத்துவார்கள் எனக் கேட்கிறார் சிதம்பரம், அதற்கான நிதி ஆதாரம் எங்கே எனக் கேட்கும் சிதம்பரத்திற்கு நிதி ஆயூக் தலைவர் பதில் ஏற்கனவே 2000 கோடி உள்ளது 2 சதவீதம் செஸ்வரி மட்டும் போதுமே, நீங்கள் முடியாது என்று நினைத்ததை முடித்துக் காட்டுபவர் தான் என் தலைவன் மோடி.

ஜிஎஸ்டி முடியாது என்று விட்டுவிட்டீர்கள் அதனை செயல்படுத்தி காட்டியவர் மோடி. பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையை மன்மோகன் சிங் ஆட்சியில் யோசித்தோம் என்றார், அதனை நடத்திக் காட்டியவர் மோடி. தூய்மை இந்தியா திட்டத்தை கேலி பேசிய நீங்கள் இன்று அத்திட்டத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் நடக்காத அதிசயம் 30 கோடி மக்களுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து 30 கோடி இந்தியர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி சாதனைப்படைத்த மோடி அரசு இன்று 60 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது, 5 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் வெற்றிகரமாக வழங்கி இன்று 8 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்திய மோடி அரசால் 50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க முடியாதா? நீங்கள் முடியாது என்று சொன்னதை முடித்து காட்டுபவர் எங்கள் மோடி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews