கொரோனா வைரஸ் பரிசோதனை 
செய்திகள்

சரக்கு லாரியில் நாகைக்கு வந்த வாலிபருக்கு மருத்துவக்குழு சோதனை

மகாராஷ்டிராவில் இருந்து சரக்கு லாரியில் நாகைக்கு வந்த வாலிபருக்கு மருத்துவக்குழுனர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.

மாலை மலர்

நாகை புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் குணவேலன் (வயது 20). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாகையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த தனியார் கம்பெனி மூடப்பட்டது. இதையடுத்து குணவேலன் ஊருக்கு திரும்ப முயன்றார். தற்போது ஊரடங்கால் பஸ், ரெயில் இயங்காததால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒரு சரக்கு லாரியில் ஏறி திருச்சிக்கு வந்தார். பின்னர் மற்றொரு லாரியில் மேலும் சிலருடன் ஏறி கும்பகோணம் வழியாக நாகைக்கு வந்தார். மற்றவர்கள் கும்பகோணத்தில் இறங்கி விட்டனர்.

இதையடுத்து வாஞ்சூர் சோதனை சாவடியில் இருந்த போலீசார் குணவேலனை அழைத்து சென்று அங்கிருந்த மருத்துவ குழுவினரிடம் சோதனை நடத்தினர். இதன் பின்னர் அவர் மேல்சோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சோதனை நடந்து வருகிறது.