மேச்சேரி:
மேச்சேரி அருகே உள்ள நங்கவள்ளி குட்டப்பட்டி ஊராட்சி மாதநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 22). இவருடைய பெரியப்பா நிலத்தில் உள்ள
பனைமரத்தில் சிலர் நுங்கு வெட்டி மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த கவுதம்ராஜ் அதனை தட்டிக்கேட்டார். பின்னர் இந்த
பிரச்சினை தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக வெடித்தது.
இதில் கவுதம்ராஜையும், அவரது நண்பரையும் அதே பகுதியை சேர்ந்த
அரவிந்தகுமார் (24), பிரவின்குமார் (24), அன்பழகன் (20) ஆகியோர் உள்பட 8 பேர் சேர்ந்து இரும்புகம்பி, உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து
நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல அரவிந்தகுமார் மற்றும் அவரது நண்பர்களை செம்மலை(49), கோகுல், (21), கவுதம்ராஜ் உள்பட 11 பேர் சேர்ந்து தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் செம்மலை, கோகுல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இருதரப்பை சேர்ந்த 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 5 பேரை தவிர மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.