செய்திகள்

ஓசூர் அருகே மெக்கானிக் கொலையில் அண்ணன்-தம்பி கைது

ஓசூர் அருகே மசூதிக்குள் புகுந்து மெக்கானிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அச்செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சமியுல்லாகான் (வயது 32). மெக்கானிக்கான இவர் கெலமங்கலம் செல்லும் சாலையில் உள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு மசூதியில் தொழுகை நடத்திய போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக்கொலை குறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சமியுல்லாகான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சமியுல்லா கானுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகி கணவரிடம் விவாகரத்து பெற்ற ரேஷ்மா என்ற பெண்ணிடம் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தார். இதை ரேஷ்மாவின் குடும்பத்தினர் கண்டித்தனர். என்றாலும் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை கைவிட மறுத்து விட்டனர்.

ரேஷ்மாவுக்கு வேறு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர். ஆனால் இந்த கள்ளத்தொடர்பு விவகாரத்தால் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடியவில்லை. இதனால் சமியுல்லாகானை கொல்ல ரேஷ்மாவின் அண்ணன் இர்ஷாத்(30). தம்பி அஸ்லாம் (24) ஆகியோர் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் இருவரும் நேற்று அதிகாலை மசூதிக்குள் சென்று சமியுல்லாகானை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் இர்ஷாத், அஸ்லாம் ஆகிய இருவரையும் இன்று காலை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இன்று அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட உள்ளனர்.