ஆவடி:
அம்பத்தூர், கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பரத், (வயது 27) மெக்கானிக். இவர் நேற்று காலை நண்பர்களுடன் திருமுல்லைவாயல், பொத்தூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மீன்பிடித்து கொண்டிருந்தார். பரத் உட்பட அவரது நண்பர்கள் அங்கேயே குளித்தனர். அப்போது தண்ணீரில் பரத் அடித்துச் செல்லப்பட்டார்.
செங்குன்றம், ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை கால்வாயில் உள்ள பெரிய பள்ளத்தில் இருந்த முட்புதரில் பரத் உடல் சிக்கியிருந்தது. உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர் விக்னேஷ் பழவேற்காட்டில் தங்கி மீன்பிடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்து கடலில் மூழ்கினார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி மீனவர்களுடன் போலீசாரும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ் உடல் பழவேற்காடு முகத்துவாரம் அருகே பழைய அரங்கம் குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.