செய்திகள்

கிருஷ்ணர் பிறந்த இடம் சுற்றுலா தலமாக்கப்படும்: உ.பி. சுற்றுலாத்துறை

பகவான் கிருஷ்ணர் பிறந்த இடம் விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் பகவான் கிருஷ்ணர் பிறந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அவரது இளமைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கொண்டு மதுராவில் சுற்றுலா தலம் அமைக்கப்படும் என மாநில சுற்றுலாத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்துவருவதாகவும், கிருஷ்ணர் வாழ்வில் நடந்த சம்பவங்களை கொண்டு சுற்றுலா தலமாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’’பகவான் கிருஷ்ணர் வாழ்ந்தபோது நிலவிய சூழலை முழுமையாக கொண்டு வரவுள்ளோம். தேவகியும், வசுதேவரும் சிறையில் இருந்தபோது பிறந்தவர்தான் கிருஷ்ணர். அந்த பகுதியில் செயற்கை முறையில் யமுனை நதியை அமைக்க திட்டமிடப்ப்ட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.