கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா
தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது கூடலூரில் இருந்து வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி,
அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை
சோதனை செய்தனர். அதில் 130 மதுபாட்டில்கள் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மசினகுடியை சேர்ந்த வரதராஜ் (வயது 47)
என்பதும், ஊரடங்கு காலத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 130 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.