செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்

ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது27). இவரது மனைவி நதியா (21). இவருக்கு தாய்-தந்தை இல்லாததால் மாமா பன்னீர்செல்வம் வீட்டிலேயே சிறுவயது முதல் வளர்ந்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு பன்னீர்செல்வத்திற்கும், நதியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இவருக்கு அடிக்கடி வயிறு மற்றும் நெஞ்சுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். பன்னீர்செல்வம் அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நதியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணையும் நடைபெற உள்ளது.

புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.