செய்திகள்

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார் ஷரபோவா

டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ஷரபோவா அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மாலை மலர்

டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ஷரபோவா (ரஷியா) 7-6, 7-6 (10-8) என்ற நேர் செட்டில் அரினா சபலென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இரண்டு செட்டிலும் தொடக்கத்தில் 1-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கினாலும் அதன் பிறகு சரிவை சமாளித்து மீண்ட ஷரபோவா இந்த வெற்றிக்காக 2 மணி 5 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாதங்கள் தடையை அனுபவித்து கடந்த ஏப்ரல் மாதம் மறுபடியும் களம் திரும்பிய ஷரபோவா அதன் பிறகு ருசித்த முதல் பட்டம் இதுவாகும்.

மொத்தத்தில் அவருக்கு இது 36-வது சர்வதேச பட்டமாகும். 30 வயதான ஷரபோவா அடுத்து சொந்த மண்ணில் நடக்கும் கிரம்ளின் கோப்பை டென்னிசில் பங்கேற்க உள்ளார்.