மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி நர்சிங் மாணவர் பலி

கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி நர்சிங் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

மரக்காணம் அருகே உள்ள கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஸ்ரீதர் (வயது 20), துளசிராமன் (18) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தேவராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரது மகன்கள் கட்டிட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். துளசிராமன் நர்சிங் படித்துக்கொண்டு விடுமுறை நாட்களில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்குமுடையான்பேட்டில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை நடந்தது. அங்கு பில்லர் எழுப்பும் பணியில் துளசிராமனும் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின்சார ஒயரில் துளசிராமனின் கை உரசியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.