பாட்னா:
ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிரபல தொழிலதிபர்கள், பெரும் முதலாளிகளை மிரட்டி கப்பம் வசூலித்து வருகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய மறுப்பவர்களை கடத்திச் சென்று பிணைத்தொகை கேட்டு மிரட்டுவதும், பணம் கிடைக்காவிட்டால் கொன்று விடுவதும் வழக்கமாக உள்ளது.
மேலும், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் மீது வெடிகுண்டுகளை வீசியும் நாசப்படுத்துகின்றனர்.
அவ்வகையில், பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசி தகர்த்தனர். இந்த தாக்குதலில் அந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள பணியாளர்கள் தங்கும் பகுதி நாசமடைந்ததாக கயா மாவட்ட போலீஸ் உதவி சூப்பிரண்ட்டு அருண் குமார் தெரிவித்துள்ளார்.