செய்திகள்

காவிரிக்காக தமிழர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி உள்ளனர்- மன்சூர் அலிகான்

காவிரி நீருக்காக மத்திய-மாநில அரசுகள் தமிழக மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி உள்ளனர் என்று திண்டுக்கலில் மன்சூர்அலிகான் கூறினார். #CauveryIssue

மாலை மலர்

நடிகர் மன்சூர்அலிகான் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு நடவடிக்கை கேலிக்கூத்தாக உள்ளது. காவிரி நீருக்காக மத்திய-மாநில அரசுகள் தமிழக மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி உள்ளனர். பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணையில் கண்துடைப்பு நாடகமே நடந்து வருகிறது. குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர் விசாரணை கமி‌ஷன் அமைத்தால் இந்த வழக்கு எப்படி நியாயமாக நடைபெறும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சியினரும் மதுபான ஆலையை நடத்தி கொண்டு பூரண மதுவிலக்கை எப்படி கொண்டு வருவார்கள். நடிகர்களுக்கு நான் எப்போதும் எதிரானவன் கிடையாது. அரசியல் கட்சி தொடங்கி மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் நடிகர்கள் ஆட்சி செய்யலாம்.


ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் இனி ஆட்சிக்கு வரக்கூடாது. அரசியல்வாதிகளுக்கு சொத்து சேர்ப்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றும் காவிரி நீர் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. அப்படி ஆனால் இவர் காவிரி நீர் பிரச்சனைக்காக செல்லவில்லை. சொத்துக்களை பங்கு போடுவதற்காகத்தான் சென்று உள்ளார். நான் சிறைக்கு சென்றதை பற்றி கவலைப்படவில்லை. நாம்தமிழர் கட்சியினர் சிறைச்சாலைக்கு செல்வதை புண்ணிய பூமிக்கு செல்வதை போலவே கருதுகிறோம்.