செய்திகள்

மண்ணடியில் 10 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

மண்ணடியில் 10 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராயபுரம்:

வடசென்னை பகுதியில் கஞ்சா விற்கும் கும்பலை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமி‌ஷனர் ஜெயராமன், துணை கமி‌ஷனர் செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மண்ணடி லிங்கி செட்டி தெருவில் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரிந்தது. உடனே 2 வாலிபர்களும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மண்ணடியை சேர்ந்த முகமது யூசுப், முஸ்தபா என்பதும் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக தயார் செய்து புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை, ஓட் டேரி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விற்றது தெரியவந்தது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தேடி வருகிறார்கள்.

திரிசூலம் பகுதியில் கஞ்சா விற்று வருவதாக பல்லாவரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கிடமாக திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர் உள்ளகரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தில்லை நடராஜன் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள்.