சாத்தூர்:
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டமலை ஊராட்சி அய்யனார் கோவில் அருகில் நடை பெற்று வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாணிக் தாகூர் எம்.பி, சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், தி,மு,க பிரமுகர் கோசுகுண்டு சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் பந்தே நவாஸ் ஆகியோருடன் ஆய்வு செய்தார்.
வேலை செய்யும் பெண்களிடம் தினந்தோறும் வேலை இருக்கிறதா? வருகை பதிவேடு பதிவு செய்கிறார்களா? தினந்தோறும் எத்தனை மீட்டர் அளந்து தருகிறார்கள்? வேலையில் கஷ்டம் எதுவும் இருக்கிறதா? போன்ற நிறை குறைகளை கேட்டறிந்தார்.
பலபெண்கள் 100 நாள் வேலை திட்டத்தை நூற்று ஐம்பது நாளாக உயர்த்தி தரவும், மர கன்றுகளை நட்டு அதனை சுற்றி முள்வேலி அமைப்பது கஷ்டமாக இருக்கிறது. கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். அதிகாரிகள் உடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் எம்.பி. தனது பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வேலை பார்த்த பெண்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட பொருளாளர் கருப்பசாமி, வட்டார தலைவர்கள் சீனிவாசன், நகர துணைதலைவர் ஜெயபாலன், மேட்டமலை ஊராட்சி தலைவர் பார்த்த சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.எஸ். பாரதி விவகாரத்தில் அ.தி.மு.க. மத்திய அரசிற்கு அடியாள் வேலையை பார்க்கிறது. ஆர்.எஸ்.பாரதி விவகாரத்தில் பாஜகவிற்கு ஆர்ப்பாட்டம் செய்ய, தமிழகத்தில் ஆள் இல்லாத காரணத்தால் அ.தி.மு.க. ஆர்பாட்டம் செய்கிறது.
தமிழகத்தில் மத அரசியலை கொண்டு வருவதற்கு முன்னோட்டமாக சாதி, அரசியலை பா.ஜனதா கையில் எடுக்கிறது.
வெட்டுகிளி விவகாரத்தில் மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.