திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கட்டாய பண வசூலில் முடி இறக்கம் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அதை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு பண வசூலில் ஈடுபட்ட ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
அதன் பிறகும் பண வசூலில் ஈடுபட்டதால் முடி இறக்கம் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது ஊழியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் முழுவதும் கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நடவடிக்கைகளால் முடி இறக்கம் ஊழியர்கள் பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்ய பயப்படுகிறார்கள். பக்தர்கள் தானாக முன்வந்து பணம் கொடுத்தாலும் வாங்க மறுத்துவிடுகிறார்கள்.
இதனால் பணம் வசூல் பெருமளவில் குறைந்து விட்டது. இதுபற்றி ஓங்கோவை சேர்ந்த பக்தர் ரமேஷ் பாபு கூறுகையில், முடி இறக்கம் ஊழியர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
பணம் கேட்டு நிர்பந்திப்பதில்லை. பணம் கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுகிறார்கள் என்றார்.
இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.