செய்திகள்

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி

மத்தியப்பிரதேசத்தில் பெண் குழந்தை பிறந்ததற்காக நடத்தப்பட்ட கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியால் சுட்டதில் குழந்தையின் தந்தை மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் உள்ள இக்யு கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தாரம் பட்வா(25). இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனை கொண்டாட நேற்று இரவு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் நந்தாராமின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பலர் துப்பாக்கிகளால் சுட்டு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது நந்தாராமின் உறவினர் திலிப் பட்வா சுட்ட குண்டு இருவர் மீது பாய்ந்தது. நந்தாராமின் தலையில் பாய்ந்த குண்டால் அவர் நிலைகுலைந்து சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்றொருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

நந்தாராம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நந்தாராமின் உறவினர் திலிப் பட்வாவை போலீசார் கைது செய்தனர். மகள் பிறந்த விழா கொண்டாட்டத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews