செய்திகள்

மாறாத ஜாதி மோகம் - மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் மாற்று ஜாதி இளைஞரை காதலிப்பதை அறிந்த தந்தை, தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் ப் பிஹ்ரா பகுதியில் உள்ள தவுலத்ப்பூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் தட்டாராம். இவரது 21 வயது மகளான பூஜா வேற்று ஜாதி இளைஞரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு தட்டாராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, பூஜா நீதிமன்றத்தை நாடியுள்ளார். தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு பூஜா நீதிமன்றத்தில் மனு அளிக்க அதனை வாபஸ் பெருமாறும், காதலை கைவிடுமாறும் தந்தை தட்டாராம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பூஜாவின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த தட்டாராம், பூஜாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக, பூஜாவின் தாயார் புகார் அளிக்கவே கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தட்டாராமை சிறையில் அடைத்துள்ளனர்.

ஜாதி மோகம் அழிந்துவிட்டதாக இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில், ஜாதி வெறியால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh