உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சென்ற காரின் முன்னால் விழுந்த நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநில பா.ஜ.க. மாநில தலைவர் அசோக்குமார் மிஸ்ரா மற்றும் சர்தார் தொகுதி எம்.எல்.ஏ. பூபேஷ் சவுபே ஆகியோர் மீது சட்ட விரோதமாக மணல் அள்ளுவது தொடர்பாக புகார் எழுந்தது. மாநில அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மணல் அள்ளுவது தொடர்பான புகாரில் சிக்கிய பா.ஜ.க. தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி லக்னோவில் முதல் மந்திரி வந்த காரின் முன் விழுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
உ.பி.யின் சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷியாம்ஜி மிஸ்ரா. இவர் இன்று காலை லக்னோவில் தலைமை அரசு அலுவலகத்தின் முன் காத்திருந்தார்.
அந்த வழியாக முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கார் வந்து கொண்டிருந்தது. சாலையோரம் நின்றிருந்த மக்களை போலீசார் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஷியாம்ஜிம்யோகி ஆதித்யநாத் வந்த காரின் முன் விழுந்தார். இதைக்கண்ட டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டு அப்புறப்படுத்தினர். அதன்பின் முதல் மந்திரி கார் தலைமை அரசு அலுவலகத்தை அடைந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் ஷியாம் மிஸ்ராவிடம் விசாரித்தனர். விசாரணையில், பா.ஜ.க. தலைவர்கள் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முதல் மந்திரியின் கவனத்தில் கொண்டு செல்வதற்காகவே கார் முன் விழுந்தேன் என அவர் தெரிவித்தார்.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வந்த காரின் முன்னால் விழுந்த நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Courtesy ANI