செய்திகள்

ஈரோடு மதுக்கடை அருகே ரத்த காயத்துடன் இறந்து கிடந்தவரால் பரபரப்பு

ஈரோடு மதுக்கடை முன் ரத்த காயத்துடன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள பிரகாசம் வீதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

இந்த மதுக்கடை முன் இன்று காலை ஒருவர் மயங்கி கிடப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் குப்புற விழுந்து கிடந்ததால் முகத்தில் ரத்த காயம் இருந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று உடனடியாக தெரியவில்லை.

அவர் குடித்து விட்டு வரும் போது தவறி விழுந்து அடிப்பட்டு இறந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

எனினும் அவர் இறந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து அருகே உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதும் தடயம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் புளு கலர் கட்டம் போட்ட சட்டையும், புளு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். மதுக்கடை முன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews