செய்திகள்

ஜனாதிபதிக்கு தடை என பரவிய வாட்ஸ்அப் வதந்தியால் கோவில் பூசாரிக்கு சரமாரி தாக்குதல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கோவிலுக்கு வந்தபோது, கோவிலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை என வாட்ஸ்அப்பில் பரவிய புரளியால் அந்த கோவிலின் பூசாரி தாக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். புஷ்கர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு மூட்டுவலி காரணமாக படியேறி செல்வது கடினம் என்பதால், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கோவில் பூசாரி உள்ளே அனுமதிக்கவில்லை என அங்குள்ளவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. இதனை அடுத்து, இந்த வதந்தி காரணமாக அசோக் மேஹ்வால் என்பவர் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது போல வரிசையில் நின்று, பின்னர் பூசாரி அருகில் வந்த போது அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில், பூசாரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வாய்ப்பு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.