இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 91), லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் வசித்து வருகிறார். இது உச்சக்கட்ட பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ளது.
இருப்பினும் நேற்று முன்தினம் மாலை இந்த அரண்மனை மதில் சுவரில் ஒரு இளைஞர் அத்துமீறி ஏற முயன்றார். இதுபற்றி தெரியவந்த 3 நிமிடங்களில் அவரை லண்டன் மாநகர போலீசின் அரண்மனை பாதுகாப்பு சிறப்பு படையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், “பக்கிங்ஹாம் அரண்மனை சுவரில் ஏற முயன்ற 24 வயதான இளைஞரை கைது செய்துள்ளோம். அவரிடம் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
அவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மத்திய லண்டன் போலீஸ் நிலையத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.