தெண்டுல்கர் மகளை கடத்துவேன் என போனில் மிரட்டல் விடுத்து கைதான மேற்கு வங்க வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வீட்டிற்கு அண்மையில் ஆசாமி ஒருவர் போன் செய்து, அவரது மகள் சாராவை விரும்புவதாகவும், அவரை கடத்த உள்ளதாகவும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். அந்த அழைப்பு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பேசப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மேற்கு வங்கம் விரைந்தனர். அங்கு வைத்து போலீசார், சாராவை கடத்த உள்ளதாக மிரட்டிய தேவ்குமார் மித்தி (வயது 32) என்ற வாலிபரை அதிரடியாக கைது செய்தனர்.
அவர் தெண்டுல்கர் வீட்டிற்கு போன் செய்து மிரட்டியதை ஒப்புக்கொண்டார். தேவ்குமார் மித்தியின் குடும்பத்தினர் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்தனர். போலீசார் அவரை விசாரணைக்காக மும்பை கொண்டு வந்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.