புகார் கொடுத்த பெண் 
செய்திகள்

பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர மறுத்த மனைவிக்கு கணவன் முத்தலாக் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டம் கேல்ஹரி பகுதியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவர் தனக்கு முத்தலாக் கொடுத்தாக கூறி போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

‘என் கணவர் தொழில் செய்ய ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அப்போது, என் பெற்றோர் மிகவும் ஏழ்மையில் உள்ளதாக அவரிடம் கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த என் கணவர், என்னை அடித்து உதைத்ததுடன், மூன்று முறை தலாக் சொன்னார். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் கொன்றுவிடுவதாக மிரட்டினார்’ என அந்த பெண் தனது மனுவில் கூறியிருந்தார். 

அவரது புகாரின் அடிப்படையில், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்த பெண்ணின் மைத்துனர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான கணவர் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.