கொல்கத்தா:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் முன் ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ப.சிதம்பரம் பொருளாதார நிபுணர், முன்னாள் உள்துறை மந்திரியும், நிதி மந்திரியாக பதவி வகித்தவர். அவர் கைது செய்யப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது. நமது நாட்டில் ஜனநாயக முறை நசுக்கப்பட்டு வரும் நிலையில், அதை காப்பாற்ற நீதித்துறை முன்வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.