செய்திகள்

தே.ஜ.கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகல் - மம்தா வரவேற்பு

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

மாலை மலர்

கொல்கத்தா:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அந்த கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை வாபஸ் பெற்றார்.

ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது மத்திய மந்திரி பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சியின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த முடிவினால் அவர்கள் நாட்டை பேரழிவுக்கு கொண்டு செல்லும் நிலையில் இருந்து காப்பாற்றி உள்ளனர். இதேபோல், மற்ற எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.#tamilnews