செய்திகள்

காஷ்மீர் தாக்குதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மம்தா பானர்ஜி

பாராளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் காஷ்மீர் தாக்குதல் நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee #PulwamaAttack

மாலை மலர்

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் புல்வாமாவில் மத்திய படை மீது கடந்த 14-ந்தேதி தாக்குதல் நடந்திருக்கிறது.

உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் அதை முறையாக தடுக்காமல் இருந்துள்ளனர். ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

பாராளுமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அதுவும் பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் தாக்குதல் நடந்திருக்கிறது. நான் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மீது ஏன் முன்கூட்டியே கடும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அதற்கான வாய்ப்பு ஏன் அளிக்கப்பட்டது.

இந்த தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நாம் அமைதியாக இருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தினமும் இதைப்பற்றி வித்தியாசமாக பேசுகிறார்கள். அவர்களுடைய பேச்சை வைத்து பார்க்கும்போது அவர்கள் மட்டுமே தேசப்பற்று கொண்டவர்கள் போலவும், நாங்கள் எல்லாம் வெளிநாட்டினர் போலவும் உள்ளது.