நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஆதரவாக சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உணவு விடுதிகளில் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவேன் என்றார். அவரது கருத்துக்கு பா.ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கஜோல் கூறுகையில், அந்த உணவு விடுதியில் அனுமதியுடன் மாட்டிறைச்சி உணவு விருந்து நடந்தது. என்றாலும் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்
இந்த நிலையில் நடிகை கஜோலுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் நிறைந்த வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மிக பிரபலமான நடிகை (கஜோல்) ஷாருக்கானுடன் நிறைய படங்களில் நடித்துள்ளர். மாட்டிறைச்சி தொடர்பாக அவர் சொன்ன கருத்து வீடியோவில் வெளியாகி உள்ளது. அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தேர்வு செய்வது அவர்களது தனிப்பட்ட உரிமை. அதற்கு யாரும் தடை போட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே மம்தா பானர்ஜி மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் ஜெகநாத் கோவிலுக்குள் நுழைய கோவில் பூசாரி தடை விதித்துள்ளார்.