செய்திகள்

வெளிநாட்டவருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருது வழங்கி பிரதமர் மோடியை கவுரவித்தது மாலத்தீவு

மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டவருக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ விருதை வழங்கி அதிபர் அப்துல்லா முஹம்மது சோலிஹ் கவுரவித்தார்.

மாலை மலர்

மாலே:

இருநாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை மாலத்தீவு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா முஹம்மது சோலிஹ் உடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மிகத் தீவிரமான கிரிக்கெட் ரசிகரான மாலத்தீவு அதிபருக்கு ‘கிரிக்கெட் பேட்’ ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இதர அணி வீரர்களின் கையொப்பங்களுடன் கூடிய அந்த கிரிக்கெட் பேட்-ஐ மாலத்தீவு அதிபர் அப்துல்லா முஹம்மது சோலிஹ் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

பின்னர், மாலத்தீவு நாட்டு அரசால் வெளிநாட்டவருக்கு அளிக்கப்படும் மிக உயரிய  ‘நிஷான் இஸ்ஸுதீன்’  (The Most Honourable Order of the Distinguished Rule of Nishan Izzuddeen) விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அதிபர் அப்துல்லா முஹம்மது சோலிஹ்  கவுரவித்தார்.