செய்திகள்

மலேசிய முன்னாள் பிரதமருக்கு ஊழல் ஒழிப்புத்துறை சம்மன்

அரசு நிதியை சொந்த வங்கி கணக்குக்கு மடைமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அந்நாட்டு ஊழல் ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. #NajibRazak #summon

மாலை மலர்

கோலாலம்பூர்:

மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மகாதிர் முகமது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.

தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியானது. அதற்கேற்ப, நஜிப் ரசாக் ரோஸ்மா மன்சூர் தனி விமானம் மூலம் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து. நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு மலேசியா நாட்டின் குடியுரிமைத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், அரசு நிதி 680 மில்லியன் டாலர்களை சொந்த வங்கி கணக்குக்கு மடைமாற்றம் செய்தது தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அந்நாட்டு ஊழல் ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. #NajibRazak #summon