வாஷிங்டன்:
கேரளாவை சேர்ந்த பெண் மெரின் ஜாய் (வயது 26). அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கோரல் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 2 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வந்தார். அவர் பணி முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒரு வாலிபர், அவரை இழுத்துப்பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர், ஒரு காரில் ஏறி அவர் தப்பினார். அப்போது, மெரின் ஜாய் மீது காரால் மோதி விட்டு சென்றார். மெரின் ஜாய், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட சற்று நேரத்தில் இறந்து விட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கார் பற்றிய தகவலை அளித்தனர். அதை வைத்து, பிலிப் மாத்யு (34) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மாத்யு, தனது கையில் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி இருந்தார். குடும்ப தகராறில், அவர் இந்த கொலையை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று தெரியவில்லை என அவர்கள் கூறினர்.