செய்திகள்

ஏமன் துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து - அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் நாசம்

ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அகதிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஏராளமான நிவாரணப் பொருட்கள் நாசமடைந்தன. #Majorfire #Hodeidahport

ஏடென்:

ஏமன் நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு குடிபெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

இதுமட்டுமின்றி, உள்நாட்டிலும் அகதிகள் முகாம்களில் லட்சக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பால் பவுடர், உடைகள், மருந்துப் பொருட்களை வெளிநாட்டு அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் அனுப்பிவைத்து வருகின்றன.

செங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹொடைடா துறைமுகத்துக்கு வந்துசேரும் இந்த நிவாரணப் பொருட்கள் இங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறன. சுமார் 2.2 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் நான்கில் மூன்றுபேர் நிவாரணப் பொருட்களை நம்பி வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு நேரப்படி இன்று காலை சுமார் 11 மணியளவில் ஹொடைடா துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அகதிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஏராளமான  நிவாரணப் பொருட்கள் நாசமடைந்ததாக ஏமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #tamilnews #Majorfire #Hodeidahport