வரைபடம் 
செய்திகள்

ஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா, கேமான் தீவுகளில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியது.

நியூயார்க்:

கரீபியன் கடல் பகுதிகளில் மிகச் சிறிய அளவிலான தீவுகள் பல உள்ளன.  நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்கள் மிகப்பெரிய நிலப்பரப்பை காட்டிலும் தீவுகளிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா மற்றும் கேமான் தீவுகளில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியது.

கியூபா அருகே அமைந்துள்ள கேமான் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் ஜமைக்கா தீவீல் கடற்கரை நகரமான லூசியா நகரத்தில் இருந்து 77.8 மைல்கள் தொலைவில் நிலநடுக்கம் (7.7 ரிக்டர்) ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக தெற்கு கியூபா மற்றும் கரீபியின் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து புளோரிடா வரையிலான அனைத்து பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூபா, ஜமைக்கா மற்றும் கேமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பின்னர் சுனாமி அபாயம் நீங்கியதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சர்வதேச சுனாமி ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT