சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகம் சென்ட்ரல் அருகே உள்ள ரிப்பன் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியாக சீரமைப்பு பணி நடைபெறுகிறது.
ரிப்பன் கட்டிடத்தில் நேற்று சீரமைப்பு பணி நடந்தது. அப்போது ஒரு பகுதியில் இருந்த ஆவணங்களை மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்றபோது அந்த ஆவணங்கள் சேதம் அடைந்தன.
பிறப்பு, இறப்பு குறித்த சான்றிதழ்கள் வைக்கப்பட்டு இருந்த அலுவலகம் சீரமைக்கப்பட்டது. அங்கிருந்த ஆவணங்களை தொழிலாளர்கள் தலையில் சுமந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது பல்வேறு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சேதம் அடைந்தன.
சரியான மேற்பார்வை இல்லாமல் கொண்டு சென்றதால் ஆவணங்கள் சேதமானது. ஆவணங்களை கொண்டு சென்ற தொழிலாளர்களுக்கு அதுபற்றிய முக்கியத்துவம் தெரியாது.
இதனால் அதிகாரியின் மேற்பார்வையில் தான் ஆவணங்கள் மாற்றப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் இதுபற்றி கண்டு கொள்ளாததால் முக்கிய ஆவணங்கள் சேதமானது. சில ஆவணங்கள் காணாமல் போனது. சில பேப்பர்கள் கிழிந்தன.
பிறப்பு, இறப்பு குறித்த பெரும்பாலான சான்றிதழ்கள் ரிப்பன் மாளிகையில்தான் உள்ளன. பிறப்பு-இறப்பு சான்றிதழ் சேதமடைவது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு கம்ப்யூட்டர் மயமாகும் பணி நடந்த போது 5 சதவீதம் சேதமாய் இருந்தது. தற்போது சேதமான ஆவணங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.