செய்திகள்

மயிலம் அருகே மின்சார வேலியில் சிக்கி விவசாயி பலி

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே காட்டு பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்எடையாளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 59), விவசாயி.

இவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே செங்கேணி (70) என்பவரது நிலம் உள்ளது. இவர் தனது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். அந்த மணிலா பயிரை காட்டு பன்றிகள் வந்து சேதப்படுத்தி வந்தது.

இதனை தடுப்பதற்காக செங்கேணி தனது நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்து உள்ளார்.

இந்த நிலையில் பெருமாள் நேற்று மாலை தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கேணிக்கு சொந்தமான நிலத்தின் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் தவறி விழுந்து விட்டார்.

இதனால் பெருமாளின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.