செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை: வேலைக்கார பெண் கைது

பரமக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 1 1/2 லட்சம் பணத்தை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முத்தையா. இவரது வீடு பரமக்குடியில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினருடன் முத்தையா வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை போனது. இது குறித்து முத்தையா எம்.எல்.ஏ.வின் மனைவி சாந்தி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

முதற்கட்டமாக எம்.எல்.ஏ. வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அங்கு வேலை பார்க்கும் பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி தொட்டிச்சியம்மன் காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சத்யா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து போலீசார் சத்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் சத்யா, ரூ. 1 1/2 லட்சத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் சத்யாவை கைது செய்தனர்.