திருச்சி:
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மாட்டிறைச்சி விற்க தடை இல்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இன்று நடை பெறும் ராமானுஜரின் 1000-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாடுகளை விற்பதற்குத் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் மாட்டிறைச்சியை விற்பனை செய்ய தடை விதிக்கவில்லை. மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதால் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு உலக அளவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பது 4 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால் இந்தியாவின் சுற்றுலாத்துறை வளர்சசி 15.2 சத வீதம் என்ற அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து பா.ஜனதா தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அனைவருக்கும் பிடித்த தேசிய நடிகர். அவர் பா.ஜனதாவில் சேருவதாக இருந்தால் அது பற்றி தலைமை முடிவு செய்யும்.
சுற்றுலாத்துறையில் இந்தியா 12 ததவீதமும், சீனா 4 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு சுற்றுலாத்துறைக்கு ரூ.1 லட் சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தாண்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா செல்வதற்கு வசதியாக மத்திய அரசு நிதியும் ஒதுக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.