மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில் நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரெயிலின் 5 பெட்டிகள் மற்றும் ஒரு எஞ்சின் தடம் புரண்டது. நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரெயில் நடைமேடை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இருப்பினும் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அருகில் உள்ள கல்யாண் நகரில் இருந்து மீட்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளன.
இந்த சம்பவம் காலை 6.35 மணியளவில் நடைபெற்றது. வாசிந்த் மற்றும் அசங்கான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ரெயிலானது காலை 7.55-க்கு மும்பை வந்து சேர வேண்டியது.
இது தொடர்பாக ரெயில்வே துறை சார்பில், “விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் உரிய இடத்தில் சேருவதற்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 ரெயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தரம் புரண்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.