கொலை 
செய்திகள்

மதுரவாயல் அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது

மதுரவாயல் அருகே வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

மதுரவாயல், பாரதிதாசன் நகர், 4-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (எ) சாமி. இவர் நேற்று காலை அதே பகுதி பலராம் நகர் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (28), வேணுகோபால் சதீஷ் (27), குமார் (48) ஆகிய 3 பேரையும் இன்று அதிகாலை கைது செய்தனர்.

பிரசாந்த் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் கட்டிடங்களுக்கு பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் காண்டிராக்ட் வேலை பார்த்து வருகிறேன்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரவாயல் அடுத்த ஷேக்மாண்யம் பகுதியில் எனது வீட்டின் அருகில் வசித்து வந்த முனியசாமி எனக்கு நண்பராக அறிமுகமானார். பின்னர் முனியசாமி அங்கிருந்து வீட்டை காலி செய்து பாரதிதாசன் நகருக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் எனக்கு மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நான் வீட்டை காலி செய்து கடந்த வாரம் முனியசாமி வீட்டின் அருகில் வந்து குடியேறினேன்.

அப்போது முனியசாமி என் மனைவி நடத்தை கெட்டவள் என்று கூறியதோடு அவரைப்பற்றி தகாத வார்த்தைகளால் பேசினார். என் மனைவி நடத்தை குறித்து பேசியதால் முனியசாமியை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு என்னுடன் வேலை பார்த்து வந்த வேணு கோபால் சதிஷ், குமார் ஆகியோருடன் பலராம் நகரில் உள்ள காலி இடத்திற்கு சென்றேன்.

முனியசாமியை அங்கு வரவழைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது “என் மனைவியை பற்றி ஏன் தவறாக பேசினாய்” என்று முனியசாமியிடம் கேட்டேன். அப்போது மீண்டும் என் மனைவி குறித்து முனியசாமி தொடர்ந்து அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கட்டையால் முனியசாமியை ஓங்கி அடித்தேன்.

அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த முனியசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டேன். இதில் அவர் இறந்து போனார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.