செய்திகள்

மதுராந்தகம் அருகே மதுவில் தண்ணீர் கலந்து விற்ற 4 பேர் கைது

மதுராந்தகம் அருகே மதுவில் தண்ணீர் கலந்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூரில் உள்ள சூரியன் காடு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இதன் அருகே சிலர் அனுமதியின்றி மது பார் நடத்தி வருவதாகவும், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி அதில் தண்ணீரை கலந்து விற்பனை செய்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் சூரியன்காடு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி மதுபார் நடத்தி வந்ததும் மதுவில் தண்ணீர் கலந்து விற்றதும் தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 370 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தஞ்சையை சேர்ந்த திவாகர், மணிகண்டன், ராகுல், சிவகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.