செய்திகள்

மதுரையில் வியாபாரியை தாக்கி பணம்-செல்போன் கொள்ளை

மதுரையில் வியாபாரியை தாக்கி பணம்-செல்போன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மதுரை:

மதுரை எல்லீஸ் நகர் 2-வது பால்பூத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது46). இவர் மொத்தமாக செருப்புகளை கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டு மீதி இருந்த ரூ.61 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

அவர்கள் பேசுவதற்கு செல்போன் தருமாறு கேட்டு உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மர்ம நபர்கள் குமாரை அடித்து கீழே தள்ளி விட்டு பையில் இருந்த ரூ.61 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.