மதுரை:
மதுரை கூடல்புதூரை அடுத்துள்ள எஸ்.ஆலங்குளம் இமயம் நகரைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது43). இவர் கோச்சடையில் மொத்த காளான் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 24-ந்தேதி வேலு மணி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து பின்புற கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 44 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
நேற்று இரவு ஊர் திரும்பிய வேலுமணி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது நகை-பணம் கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
எஸ்.எஸ்.காலனி 70 அடி ரோடு சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள் (55). இவர் நேற்று காலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பாண்டியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.