திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் தன்னுடைய இரண்டு மகன் மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டின் மாடியில் இவர் குடியிருந்து வருகிறார். கீழே மகன் குடியிருந்து வருகிறார்.
வீரபத்திரன் இரவு சாப்பிடுவதற்காக கீழ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் மாடியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. மின் கசிவினால் வீடு தீப்பிடித்து மளமளவென எரிந்து கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட பொருட்கள் நாசமாயின.
மேலும் அளவுக்கு அதிகமாக புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர். தீ மளமளவென்று பரவியதால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பழங்கால வீடு என்பதால் வீட்டில் உள்ள மரப்பொருட்கள் மற்றும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் உரிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.