மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏக்கள் ஏ.கே. போஸ், பெரியபுள்ளான், நீதிபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் 3 எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதா தனக்கு பின்னரும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. இயக்கம் நீடித்து நிலைத்து நிற்கும் என்றார். ஆனால் சில துரோகிகள் கட்சியையும், ஆட்சியையும் அழிக்க துடிக்கிறார்கள்.
நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாக இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற சிலரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வரவில்லை. ஆனால் அவர்கள் திட்ட மிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட நிலையில் எதிர் அணியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கும், அவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கும் எங்களால் பதில் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேச்சுவார்த்தை குழுவை உடனே கலைக்க வேண்டும். அவர்களுடன் இணைப்பு பேச்சுவார்த்தை தேவையில்லை என கருதுகிறோம்.
பேச்சுவார்த்தை குழுவை கலைக்க வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதே போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொறடாவின் முடிவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
மதுரை புறநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 100 சதவீத நிர்வாகிகள் அ.தி.மு.க. அம்மா அணியில் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே எங்களுக்குள் எந்தவித பிரிவினையும் இல்லை. உடனடியாக பேச்சுவார்த்தை குழுவை கலைத்து கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நடத்திடவும், மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.