செய்திகள்

பாகுபாடு இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகுபாடு இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை:

திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பொன்.முருகேசன் என்பவர் மதுரை ஐகோர்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் புகழ் வாய்ந்த கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு 3 வகையான முறைகளை கடைபிடிக்கின்றனர் .

அதாவது அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகளுக்கு முதல் வரிசை, அடுத்த வரிசை 100 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்லும் பக்தர்களுக்கு 2-வது வரிசை.

இந்த 2 வரிசையில் வருபவர்களுக்கும் அம்மன் கருவறை அருகே 10 நிமிடங்கள் அமரவைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

3-வது வரிசையில் பக்தியுள்ள ஏழை பக்தர்கள் பொது வரிசையில் , இலவச தரிசனத்திற்காக 15 அடி தூரத்தில் நின்று அம்மனை ஒரு நிமிடத்திற்குள் தரிசனம் செய்து உடனே அனுப்பி வைக்கப்படுகின்றனர் .

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனத்தில் பாகுபாடு பார்ப்பதும் ஒரு வகையில் தீண்டாமைக்கு இணையான செயலாகும். எனவே பாகுபாடு பார்க்காமல், ஒரே தூரத்தில், சமநேரத்தில் தரிசிக்க உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ராஜ மாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனத்தில் இலவச தரிசனம், கட்டண தரிசனம் என பாகுபாடு பார்க்காமல் இரு வரிசையில் பக்தர்கள் வந்தாலும் ஒரே தொலைவில் நின்று சாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர். #Tamilnews