செய்திகள்

அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கோரிய வழக்கு- பள்ளி கல்வித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC

மதுரை:

மதுரை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடம் ஆகிறது. பள்ளி கட்டிடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மாணவர்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே பள்ளிகளை ஆய்வு செய்து பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து பள்ளிகள் ஆய்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வருகிற 29-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். #MaduraiHC