செய்திகள்

முன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு

மதுரை நிலையூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

மாலை மலர்

மதுரையைச் சேர்ந்தவர் கே.கே. ரமேஷ். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

2012-ம் ஆண்டு நலிந்தோர்கள் 17 பேருக்கு நிலையூர் பகுதியில் பட்டா மனைகளை அப்போதைய கலெக்டர் சகாயம் வழங்கினார். அதன் பின்னர் அவர்கள் அந்த இடத்தை பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த இடம் அங்கு இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய பதில் இல்லை.

இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது சகாயம் மாற்றப்பட்டு சுப்பிரமணியன் கலெக்டராக வந்தார்.

அவர் 17 பேருக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கு உரிய இடம் நிலையூர் பகுதியில் உள்ளது என்று தவறான தகவலை கோர்ட்டில் தெரிவித்தார். 17 பேருக்கும் வழங்கப்பட்ட இடத்தை அவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். தற்போதைய கலெக்டர் வீரராகவராவும் அதே பதிலை கூறி வருகிறார்.

எனவே கோர்ட்டுக்கு தவறான தகவலை தெரிவித்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.