ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், சிதம்பரத்தைச் சேர்ந்த கீதா, வக்கீல் வெண்ணிலா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியே மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனுக்களில் புனித தலமான ராமேசுவரத்திற்கு பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் ராமேசுவரத்தில் அடிப்படை வசதிகள் சரி வர இல்லை.
ராமநாதசுவாமி கோவிலை சுற்றிலும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகிறது. பக்தர்கள் புனித நீராடும் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலக்கிறது.
அங்கு நீராடும் பக்தர்கள் துணிகளை விட்டுச் செல்கின்றனர். இதனால் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால் பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மேலும் பாம்பன் பாலம் சரியான முறையில் சீரமைக்கப்படவில்லை. தனுஷ்கோடியிலும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 17-ந்தேதி நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நிஷாபானு ஆகியோர் ராமேசுவரம் சென்று பாம்பன் பாலம், அக்னி தீர்த்தக்கடல் மற்றும் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அங்கு நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோவில் இணை ஆணையர் மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி இன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, ராமேசுவரம் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி ஆகியோர் ஐகோர்ட்டில் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், நிஷாபானு ஆகியோர் பக்தர்களின் நலன் கருதி கோவிலின் உள்ளே உள்ள 1 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை பிரகாரத்திற்கு வெளியே அமைக்க 2 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.