செய்திகள்

மதுரையில் தீபா அணி கூண்டோடு கலைப்பு: பகுதி செயலாளர் பதவிக்கு ரூ.1 லட்சம் கேட்பதாக புகார்

மதுரையில் தீபா அணி நேற்று கலைக்கப்பட்டதால் பகுதி செயலாளர் பதவிக்கு ரூ. 1 லட்சம் வாங்கி தர சொல்லி வற்புறுத்தியதால் ராஜினாமா செய்ததாக மதுரை மாவட்ட செயலாளர் புகார் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணியில் மோதல் முற்றியுள்ளது.

ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் தீபா வீட்டில் குவிந்த தொண்டர்கள் அரசியலுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்றே தீபா அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்று தொடங்கப்பட்ட இயக்கம் பின்னர் அ.தி.மு.க. தீபா அணியாக மாற்றப்பட்டது. அதற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் தீபா அணியின் செயல்பாடுகளால் அவரது வீட்டில் இருக்கும் தனிநபர் ஒருவரின் ஆதிக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுவே பூதாகரமாக வெடித்துள்ளது.

இதனை தொடர்ந்து தீபா அணியை கலைக்க மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதன் முடிவில் முதல்கட்டமாக மதுரையில் தீபா அணி நேற்று கலைக்கப்பட்டது. மதுரை மாநகர் மவட்ட செயலாளரான கார்த்தி கேயன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபா அணியில் மாவட்ட நிர்வாகிகளுக்கு ரூ. 2 லட்சம் பகுதிச் செயலாளர்களுக்கு ரூ. 1 லட்சம், வட்டச் செயலாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வாங்கி கொடுங்கள் என தலைமை கட்டளை இட்டுள்ளது. இந்த கட்டளயை என்னால் நிறைவேற்ற முடியாது.

வசூல் செய்து கொடுத்தும் ஆட்களை கூட்டிச்சென்று விட்டும் பதவியில் நீட்டிக்க நான் விரும்பவில்லை. ஆதலால் நான் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். அத்தோடு மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. ஜெ.தீபா அணியும் கலைக்கப்படுகிறது புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் விசுவாசிகளாக இருப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.