செய்திகள்

மதுரையில் தொடர் சம்பவம்: 3 பெண்களிடம் நகை பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்த பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாலை மலர்

மதுரை:

மதுரை கோரிப்பாளையம் சின்ன கண்மாய் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 65). இவர் நேற்று காலை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மகாலட்சுமி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

மதுரை தெற்குவாசல் நாடார் வித்யாசாலை தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மீனா (வயது 31). நேற்று இவர் உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சித்திரை திருவிழாவிற்கு சென்றார்.

அழகர்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மீனா கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

மதுரை வண்டியூருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ சென்றது. கல்லாணை தியேட்டர் அருகே ஷேர் ஆட்டோ மெதுவாக சென்று கொண்டிருந்தது.

இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த யாகப்பா நகர் கலைவாணர் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு தப்பினர். அதில் 3 செல்போன்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்தது.

கருப்பாயூரணி சாவடி தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 35). இவர் நேற்று பாண்டிகோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி பால்பாண்டியிடம் இருந்த 3 புவுன் நகை, ஆயிரத்து 350 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர்.