மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி வனிதா (வயது 34). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தில் உள்ள சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மகேந்திரனை அவரது சகோதரர் மாரிக்கண்ணன் கடத்திச் சென்று விட்டதாக தெரிகிறது.
இது குறித்து வனிதா மேலூர் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற ஆதங்கத்தில் வனிதா 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு இன்று மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்தார்.
அங்கு தனது குழந்தைகள் மீது மண்எண்ணை ஊற்றி, தானும் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
கணவரை மீட்கக்கோரி இளம்பெண் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.